இச்சட்டத்தின் 3 ஆம் பிரிவானது கடந்த காலங்களில் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் மற்றும் சிவில் சமூகத்தினால் முன்வைக்கப்பட்ட தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் எழுத்துமூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கைது செய்வதற்கான கடுமையான நிபந்தனைகள்
பொலிஸ் மா அதிபரின் புதிய வழிகாட்டல்களின்படி, ஒரு நபர் வெளியிடும் கருத்து அல்லது அறிக்கை வெறுமனே ஒருவரை அவமதிப்பதாகவோ அல்லது மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகவோ இருந்தால் மட்டும் அவரைக் கைது செய்ய முடியாது. மாறாக, குறித்த கருத்து யுத்தத்தைத் தூண்டும் வகையிலோ அல்லது தேசிய, இன மற்றும் மத ரீதியான வெறுப்புணர்வைத் தூண்டி வன்முறையை உருவாக்கும் வகையிலோ (Advocacy of Hatred) இருக்கிறதா என்பதைத் தீர ஆராய்ந்த பின்னரே கைது நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்டப் பிரிவின் முன் அனுமதி கட்டாயம்
இனிவரும் காலங்களில் ICCPR சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைது செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி அது குறித்து பொலிஸ் தலைமையகத்தின் சட்டப் பிரிவின் (Legal Division) பணிப்பாளருக்கு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். சட்டப் பிரிவிடமிருந்து முறையான எழுத்துமூல அனுமதியைப் பெற்ற பின்னரே எவரையும் கைது செய்ய முடியும் என்ற நடைமுறை தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஒரு தனிநபரையோ அல்லது ஒரு குழுவையோ வெறுமனே அவமதித்தல் அல்லது மத ரீதியான அகௌரவத்தை ஏற்படுத்துதல் போன்ற காரணங்கள் இச்சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைது செய்யப் போதுமானதல்ல என்பதைப் பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தியுள்ளார். இந்த புதிய விதிமுறைகளை மீறும் அல்லது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் விசாரணை அதிகாரிகளுக்கு எதிராகக் கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்த அதிரடி மாற்றமானது, நாட்டில் நிலவும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும், சட்டங்கள் அரசியல் ரீதியாகவோ அல்லது தனிப்பட்ட பகமை காரணமாகவோ தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கும் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.







